Tuesday, March 31, 2009

இறையுதிர்காலம்: 3 நியண்டர்தல் கரடிக்கதைகள்


இத்தாலிக்கு மேற்கே இருக்கும் ஒரு குட்டி நாடு ஸ்லோவேனியா. இந்நாட்டில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்ட மிகப் பழமையான இடம் த்விஜே பேபி எனப்படும் ஒரு குகை. இக்குகை குடியேற்றத்தின் காலகட்டம் ஏறக்குறைய 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் என கணிக்கப்படுகிறது. இது நியாண்டர்தல்கள் எனப்படும் நவீன மானுட இனத்துக்கு முற்பட்ட மானுட முன்னோடி இனம். 1995 இல் இவான் துர்க் எனும் ஆராய்ச்சியாளர் இங்கே 43,100 ஆண்டுகள் பழமையான ஒரு எலும்புத்துண்டைக் கண்டுபிடித்தார். அதில் இரண்டு ஓட்டைகள். ஒருவேளை அந்த விலங்கைக் கடித்துக் கொன்ற விலங்கின் பல்தடங்களாக இருக்கும் என்றுதான் அது கருதப்பட்டது. பிறகு அப்படி இருக்க முடியாது என்பது தெளிவாயிற்று. இன்றைக்கு தேசிய அருங்காட்சியகத்தில் இந்த எலும்புத்துண்டு உலகின் மிகப்பழமையான புல்லாங்குழலாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. நியாண்டர்தல்கள் குறித்த நம் பார்வை மாற்றத்தை காட்டும் ஒரு கண்டுபிடிப்பு இது.

டார்வினின் புகழ்பெற்ற நூல் வருவதற்கு முன்னரே நியாண்டர்தல் மானுட முன்னோடிகளின் எலும்புகள் கண்டெடுக்கப்படும் படலம் ஆரம்பித்துவிட்டது. அன்றைய தொல்-மானுடவியலாளர்கள் நியாண்டர்தல்களை ஒருவித மடச்சாம்பிராணிகளான மந்த புத்தி உடைய பண்பாடில்லாத பேசும் திறனோ எனவே மொழியோ இல்லாத பரிணாமத் தோல்விகளாக சித்தரி
த்துவந்தனர். பண்பாடற்ற மந்த புத்தி உடையவனாக ஒருவனை காட்டும் வசைச்சொல்லாக கூட பொது புழக்கத்தில் நியாண்டர்தல் எனும் பதம் பயன்பட ஆரம்பித்தது. ஆனால் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் நமக்கு நியாண்டர்தல்கள் குறித்த பார்வையை மாற்ற ஆரம்பித்தது. உதாரணமாக ஹைராய்ட் எலும்பு எனும் ஒரு எலும்பு மனிதர்களில் மட்டுமே நாக்கின் பல அசைவுகளை தொண்டை குழியுடன் இணைவிக்கும்படியாக எனவே ஒலி எழுப்புதலுக்கு காரணமாகும் படியாக அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு நம் மானுட இனத்துக்கு மட்டுமே அமைந்துள்ள சிறப்பாக கருதப்பட்டது. எனவே மொழி மானுடத்தின் உயிரியல் சிறப்பாகக் கருதப்பட்டது. 1985 இல் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தல் எலும்புகளில் இதே அமைப்புடனான ஹைராய்ட் எலும்பு கண்டெடுக்கப்பட்டது. அவர்களின் கருவிகளின் பன்மையும் பயன்பாடும் தொல்-மானுட ஆராய்ச்சியாளர்களால் விரிவாக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

இந்நிலையில் நியாண்டர்தல்களிடம் நாம் காணும் முக்கிய அம்சம் - அதாவது இந்த தொடருக்கு மிக முக்கிய அம்சம்: அவர்களது மிக விரிவான ஈமச்சடங்குகள். நியாண்டர்தல்கள் தங்களில் நோயுற்றவர்களையும், காயமடைந்தவர்களையும் வயதானவர்களையும் பேணும் பண்பாட்டை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இது அவர்கள் வாழ்ந்த இடங்களை ஆராய்ந்ததன் மூலம் தெரியவருகிறது. ஆக, உயிர் பிரிதல் என்பது சோக நிகழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். உயிர் பிரிந்த பின் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கக் கூடும் எனும் நம்பிக்கையை காட்டும் சடங்குகளை அவர்களிடம் காணமுடிகிறது.

வடக்கு ஈராக்கில் நியாண்டர்தல்களின் அடக்க இடங்கள் கிடைத்துள்ளன. இதில் உள்ள ஒரு முழுமையான அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உடலில் எட்டுவித மலர்கள் தூவப்பட்டிருந்தன. உஸ்பெக்கிஸ்தானில் ஒரு நியாண்டர்தல் குழந்தையின் ஈமச்சடங்கில் அதனை சுற்றி ஆட்டெலும்புகள் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. பிரான்ஸில் ஒரு நியாண்டர்தல் புதையல் மேற்கு கிழக்காக உடலை வைத்து அதனுடன் இறந்தவருக்கு இறைச்சி படையலாக வைத்து புதைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இறப்பு குறித்த வேதனை ( முதியோரை பேணுதல் என்பது அவர்கள் மரணத்தை தடுக்க. ஏனெனில் மரணம் என்பது பிரிவு என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.), மரணத்துக்கு பின் ஏதோ ஒரு வாழ்க்கை தொடர்ச்சி குறித்த உணர்வு ஆகியவை நியாண்டர்தல்களில் நாம் காண்கிறோம்.

இவற்றுக்கும்
அப்பால் அவர்களுக்கு வழிபாடு கூட இருந்திருக்கலாம் என்பதாக தொல்-மானுடவியலாளர்களில் கணிசமான பிரிவினர் கருதுகின்றார்கள். கரடிகளை அவர்கள் புனித விலங்குகளாக அல்லது அதீத சக்தி வாய்ந்த வழிபடத்தக்க விலங்குகளாக கண்டிருக்கின்றனர். ஜெர்மனியில் கிடைத்த நியாண்டர்தல்கள் வாழ்ந்த குகைகள் பலவற்றில் கரடிகளின் மண்டையோடுகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதை தொல்-மானுடவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். (சிப்பீவா (Chippewa) எனும் பூர்விக அமெரிக்கவாசிகள் கரடிகளை கொன்றபிறகு அவற்றின் தலைகளை வெட்டி பத்திரமாக வைத்து அதற்கு புகையிலை
நைவேதித்து அதனை கொல்ல நேர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்திக்கும் சடங்குகளை நிகழ்த்துவர். ஆக, ஈமச்சடங்குகள் மட்டுமல்ல புனிதத்துவ நம்பிக்கைகளும் சடங்குகளும் கூட இவர்களிடையே நிலவிவந்திருக்கின்றன. பனியுகத்தை மிகவும் வெற்றிகரமான தகவமைப்புகள் கொண்டிருந்த நியாண்டர்தல்கள், பனியுகம் முடிந்து புல்வெளி சமவெளிகள் உருவாக ஆரம்பித்த போது இவர்களை போன்ற மற்றொரு மானுட கூட்டம் மிகவும் வெற்றியடைய ஆரம்பித்திட நியாண்டர்தல்கள் மறைந்தனர்.

ஸ்லோவேனியாவின் நியாண்டர்தல் "புல்லாங்குழல்" இரண்டுவயது கரடியின் தொடை எலும்பிலிருந்து செய்யப்பட்டது. ஒருவேளை அவர்களே இசையை இறைச்சடங்கில் பயன்படுத்துவதிலும் நம் முன்னோடிகளாக இருந்திருக்கலாம்.

1 comment:

  1. அருமையாக செல்கிறது தொடர்.. நல்ல உழைப்பை நல்கி எழுதி இருக்கிறீர்கள்..

    // இங்கே 43,100 ஆண்டுகள் பழமையான ஒரு கண்டுபிடித்தார். //

    இந்த வாக்கியம் முழுமை பெறவில்லை.. கவனிக்கவும்.

    ReplyDelete