Sunday, April 5, 2009

இறையுதிர்காலம்-5: கனவில் உருவாகி...

பூமியின் தெற்கு அரைக்கோளத்தை (Southern hemisphere) எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. இங்கே ஏறக்குறைய 40,000 ஆண்டுகளாக பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் பூர்விகக்குடி மக்களிடம் தொடரும் புனித பாரம்பரியமாக இந்த பாறை ஓவியங்கள் இருந்துவருகின்றன. டாஸ்மானியா போன்ற ஆஸ்திரேலிய தீவுகளிலும் மிகப்பழமையான பாறை ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்விகக்குடியினர் இந்த பாறை ஓவியங்களை நனவுலக வாழ்க்கையைச் சார்ந்த ஓவியங்களாகவும் கனவுக்கால (Dreamtime: இது ஒரே வார்த்தை: Dream time என இருவார்த்தைகள் அல்ல.) ஓவியங்களாகவும் பிரிக்கின்றனர். கனவுக்காலமே சிருஷ்டியின் காலம். இது நிகழ்ந்து முடிந்த ஒன்று அல்ல.மாறாக நிகழ்ந்து கொண்டே இருப்பது. நாம் வாழும் யதார்த்த நனவுலக காலத்துடன் இணைந்து செல்லும் புனிதக்காலமே கனவுக்காலம் ஆகும். இக்கனவுக்காலத்தில் வசிக்கும்/செயல்படும் சக்திகள் தங்களை வெளிப்படுத்தும் விதமே இந்த புனித பாறை ஓவியங்கள் ஆகும். பூர்விகவாசிகள் "தாமாகவே கனவுக்காலங்களிலிருந்து பாறைகளில் வெளிப்படுத்திக்கொள்பவை" என இவற்றை கருதுகின்றனர். வானவில்-சர்ப்பம், மூதாதை வடிவங்கள் போன்றவை கனவுக்காலத்திலிருந்து பாறைகளுக்கு வரும் புனித ஓவியங்கள் ஆகும். இவை இறை-ஆவேசியாலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சடங்குப்பயிற்சிகள் அளிக்கப்பட்ட அவரது சீடர்களாலும், அவர்களது ஆவேசத்தன்மையுடன் உருவாக்கப்படுபவை. கனவுக்காலத்திலிருந்து நனவுக்காலத்தில் வருவது ஒருவித முழுமைத்தன்மையை இழப்பதாக - ஒருவித இறப்பாக- இவர்களால் காணப்படுகிறது. அதாவது பிறப்பு என்பதே ஒருவித இழப்பும் இறப்பும்தான். பின்னர் இவ்வுலகிலிருந்து மீண்டும் படிப்படியாக முழுமை அடைவதற்கு ஒரு கருவியாக இந்த ஓவியச்சடங்குகள் பயன்படுகின்றன. கனவுக்காலத்துக்கு இங்கிருந்தபடி உங்கள் பிரக்ஞையை நகர்த்த இறை-ஆவேச பயணங்கள் செயல்படுகின்றன. கனவுக்காலத்துக்குள் ஆழ்ந்து செல்ல அதற்கேற்ற பயிற்சிகளை பெற வேண்டும். பெண்களும் பயிற்சி பெற்று கனவுக்காலத்துக்குள் சென்று ஓவியங்களை நனவு பிரக்ஞையின் தளத்துக்கு கொண்டு வர முடியும்.

கனவுக்காலத்தை பல்வேறு ஆஸ்திரேலிய பூர்விகக்குடி சமுதாயங்களையும் ஒருங்கிணைக்கும் இறை-அனுபவமாகக் கொள்ளலாம். பூர்விகக்குடி குழுக்களிடையே கனவுக்காலத்தின் இயற்கை குறித்த வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. நனவுக்காலத்துக்குள்ளேயே இயங்கும் ஒரு காலமாக கனவுக்காலத்தை சில பூர்விகக்குடிகளும் நனவுக்காலத்துக்கு இணைக்காலமாக கனவுக்காலத்தை சில பூர்விகக்குடிகளும் காண்கிறார்கள். ஆனால் அனைத்து பூர்விகக்குடிகளும் சிருஷ்டி என்பது நிகழ்வதே கனவுக்காலத்தில்தான் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

வெள்ளை இன மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியபோது அங்கிருந்த பூர்விகக்குடிகளை கிறிஸ்தவத்துக்கும் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும் மாற்ற முற்பட்ட போது பூர்விகக்குடிகள் தங்கள் அடையாளத்தைக் காப்பாற்ற ஒரு கருவியாக பாறை ஓவிய சடங்குகளை மேற்கொண்டனர். சில புனித இடங்களில் மேற்கொள்ளப்படும் சடங்குகளின் மூலம் கனவுக்காலத்துக்குள் ஒருவர் செல்லமுடியும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே இயற்கையாக உருவான சில புவி-அமைப்புகள் கனவுகாலத்துக்கு செல்ல ஏதுவான புனித இடங்களாக அவர்களால் போற்றப்படுகின்றன. எவ்வாறு இயற்கையின் விநோததன்மை இறை அனுபவ வினை ஊக்கியாக மனிதபிரக்ஞையில் செயல்படுகிறது என்பதனை அதன் தூய வடிவத்தில் ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளில் காணலாம். ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளால் "புராஞ்சி" என அழைக்கப்படும் இடம் "Arnhem land" என வெள்ளையர்களால் அழைக்கப்படுகிறது. இந்த இடமே விண்கற்களால் மிக அதிகமாக வடு ஏற்பட்ட இடமாக ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த இடம் கனவுக்காலத்துடன் தொடர்பு கொள்ளும் சடங்குகள் நடத்தப்படும் புனித பூமியாக ஆஸ்திரேலிய பழங்குடிகளால் கருதப்படுகிறது. மற்றொரு மிக முக்கியமான புனித தலமாக ஆஸ்திரேலிய பழங்குடிகளால் போற்றப்படும் இடம் உல்யுரு(uluru) எனப்படும் பிரம்மாண்டமான பாறையாகும். வெள்ளையர்களால் Ayer's rock என இது அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கண்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த பாறை. 8 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடிப்பாகமும் 350 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பாறை கனவுக்காலத்தின் சிருஷ்டி தொன்மங்கள் பூமியைத் தொட்ட தலமாக பூர்விகக்குடிகளால் வணங்கப்படுகிறது. (இப்பாறையில் ஏறுவது அதன் புனிதத்தை அவமதிக்கும் செயலாக அவர்கள் கருதுகின்றனர். அங்கு வரும் சுற்றுலாவினரை அதனை மதிக்கக் கோரி ஒரு அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய அரசு சுற்றுலா பயணிகளை இப்பாறையின் மீது ஏற அனுமதிப்பதுடன் வசதியும் செய்து கொடுத்துள்ளது. ஆனாலும் இது ஆபத்தானது என்பதுடன் இப்பாறையில் ஏறும் முயற்சிகளில் மரணங்களும் சம்பவித்துள்ளன.) ஆஸ்திரேலியா எங்கும் உள்ள பூர்விகக்குடிகள் இப்பாறைக்கு புனித காலங்களில் குறிப்பிட்ட பாதைகள் மூலம் வருகின்றனர். புனித ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. இப்பாதைகள் கனவு-இழைகள் மூலம் இப்பாறையுடன் இணைக்கப்பட்டவையாக கருதப்படுகின்றன.

ஒருவிதத்தில் இவை அனைத்தும் நம் இறை-அனுபவங்கள் எத்தகைய வேறுபட்ட அக-சக்திகளாலும் புறச் சூழல்களாலும் உருவாக்கப்படுகின்றன என்பதை காட்டுகின்றன. எளிய இயற்கை வழிபாட்டிலிருந்து முன்னகர்ந்து மானுடம் பண்பாடு அடைய அடைய மத-நம்பிக்கைகள் முதிர்ச்சி அடைந்தனவா? அல்லது இறை-அனுபவக்கிளர்ச்சியும் அதன் சடங்கு வெளிப்பாடுகளும் அவற்றின் உயிர் மையத்தில் முழுமையான அனுபவமாகவே விளங்கிட, நம் பண்பாடுகளின் உதிரி முலாம்களே அவற்றை சிக்கலான இறையியல் தத்துவங்களாகவும், மதங்களாகவும் மாற்றிக்காட்டுகின்றனவா?

எதுவானாலும் ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் கனவுக்காலம் எனும் கருத்தாக்கம் மானுடப்பிரக்ஞையின் அறிவியலில் ஒரு முக்கியமான தாவலாகும். இதன் மூலம் இறை-அனுபவத்தின் ஒரு முக்கிய பரிமாணத்தை அவர்கள் கண்டடைந்ததுடன் அதனை ஒரு பண்பாடாகவே அவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர். "வளர்ந்த" மதங்கள் உருவாக்கியுள்ள இறையியல் கதைகளையும் தத்துவார்த்த வியாக்கியானங்களையும் விட இறை-அனுபவம் எனும் நிகழ்வுக்கு உண்மையின் மிக அருகில் செல்லும் பார்வை இதுவே என்பதனை இத்தொடரில் போக போக தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, April 1, 2009

இறையுதிர் காலம் 4: குகையில் கருவாகி...

பனியுகம் முடிந்த போது சமவெளிகளெங்கும் பசுமை படர ஆரம்பித்தது. பனியுகத்தில் வளர்ந்து வந்த நியாண்டர்தல்கள் இப்போது அழிய ஆரம்பித்தனர். மற்றொரு இரண்டுகால்களில் நடக்கும் பெருங்குரங்கினம் பல்கிப் பெருக ஆரம்பித்தது. அதன் பெயர் மனிதர்கள் (Homo sapiens). இன்றைக்கு எறக்குறைய 24000 ஆண்டுகளுக்கு முன் வரை கூட நியாண்டர்தல்கள் வாழ்ந்திருந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நம் மானுட முதாதையர் நியாண்டர்தல்களுடன் மோதியிருக்கலாம், நட்பு கொண்டாடியிருக்கலாம் ஏன் பாலியல் உறவுகள் கூட ஏற்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் சந்ததிகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது அந்த பரம்பரை நின்றுவிட்டிருக்கக் கூடும். இருந்தாலும் நியாண்டர்தல் ஜீன்கள் மானுட மரபுக்கோளத்தில் - Genome-இல் இருக்கக் கூடுமோ எனும் கேள்வி எப்போதுமே சுவாரசியமான ஒன்றாக இருந்துவருகிறது. எதுவாயினும் நியாண்டர்தல்கள் பரிணாம ஆற்றோட்டத்தில் கரைந்தழிய, மானுடம் பரவலாயிற்று.

மானுட உதயத்துடன் இணைந்து நாம் காணும் ஒருவிஷயம் அதன் இறை நம்பிக்கைகள். இங்கு இறை என்பது புனிதத்துவம், மரணத்துக்கு பின் உயிர் குறித்த நம்பிக்கைகள், அற்புதங்களின் நம்பிக்கைகள், ஆவேச சடங்குகள் என அனைத்தையும் அணைக்கும் ஒரு பதமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆகச்சிறந்த வெளிப்பாடாக நாம் காண்பது குகை ஓவியங்களை. பூமியின் வட-அரைக்கோளத்தின் மிகப்பழமையான குகை ஓவியங்கள் என்று சொன்னால், அவை ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிடைக்கிறது இத்தாலியில் கண்டெடுக்கப்பட்ட குகை ஒன்றில் இன்றைக்கு ஏறக்குறைய 36000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியத்தில் மிருகத்தலை கொண்ட மனிதனை காணமுடிகிறது. அதே போல தெற்கு ஆப்பிரிக்காவில் அப்பல்லோ-11 என பெயரிடப்பட்ட இடத்திலுள்ள 25,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்களிலும் இத்தகைய விலங்கு உருவ மனிதர்களை காணமுடிகிறது இத்தகைய மனிதர்கள் விலங்குத்தோல் போர்த்திய இறை-ஆவேசியாக (shamans) இருப்பர். தம்முடன் வாழும் மக்களின் வேட்டைகள் நன்றாக அமைந்திட வழிகாட்டுபவர்கள். இந்த வழிக்காட்டுதலுக்கா அறிவை அவர்கள் தம் பிரக்ஞையை வேறுதளத்துக்கு கொண்டு சென்று ஆவேசம் அடைவதன் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு பிரக்ஞையை வேறு தளத்துக்கு நகர்த்துவது (altering the state of consciousness) கூட்டு இசை மூலம் அல்லது சடங்குகள் மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இந்த இறை-ஆவேச நிலையுடன் பரம்பரை அறிவும் இணைந்திருப்பதன் மூலம் அன்றாடம் கிடைக்க வேண்டிய நல்ல வேட்டைக்கான குறிப்புகள் அந்த கூட்டத்தினருக்கு கிடைக்கும். எந்த கூட்டத்தின் இறை-ஆவேசி சிறப்பாக செயல்படுகிறானோ அந்த கூட்டம் நன்றாக பெருகும்; வலிமையுடையதா மாறும். நியாண்டர்தல்கள் காலத்திலேயே தாவரங்களுடன் மனித முன்னோடி புனித உறவுகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டான் என்பதனை கண்டோ ம். இந்த அறிவும் இறை-ஆவேசிக்கு இருந்திருக்கும். அத்துடன் வானில் காணும் விண்மீன்களின் இயக்கத்துடனும், நிலவின் கலைகளின் மாற்றங்களுடனும் புவியின் இயற்கை மாறுவதையும் அவன் உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வானின் மாற்றங்களை வைத்தே புவியின் இயற்கை சுழற்சிகளை கவனிக்கும் ஆற்றல் இறை-ஆவேசிக்கு கிடைத்த போது அவனது மனம் பெற்றிருக்கக்கூடிய கிளர்ச்சி, பின்னர் ஐன்ஸ்டைன் கூறிய பிரபஞ்ச இறை உணர்வுக்கு (cosmic religious consciousness) ஈடானதாகவே இருந்திருக்கக் கூடும். உதாரணமாக குகை ஓவியங்களின் உன்னத உச்சம் என கருதப்படும் பிரான்ஸின் லஸ்கோ(Lascaux) குகை ஓவியங்களை எடுத்துக்கொள்வோம். இவை 16,000 ஆண்டுகள் முதல் 22,0000 ஆண்டுகள் வரை பழமையானவை. இவற்றில் பல காளைகள் காட்டப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த நவீன ஆராய்ச்சியாளர்கள் இவற்றில் விண்மீன் கூட்டங்களின் அமைப்பைக் காட்டும் சித்திரங்களை அடையாளம் காட்டுகின்றனர். பூமியில் தன் வாழ்க்கையை பாதிக்கும் நிகழ்வுகளையும் விண்மீன்களின் சுழல்களையும் ஏறக்குறைய 25,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். பல வானியல் நிகழ்வுகள் பிற்கால தொன்மங்களுக்கு அடித்தளமாயின. அத்தொன்ம வேர்கள் கற்கால மனிதனின் அனுபவக்கிளர்ச்சியிலேயே புதைந்து கிடக்கக்கூடும்.

மற்றொரு முக்கியமானதோர் இறைத்தாவலும் இக்காலகட்டத்தில் நிகழ்ந்தது. பெண்ணின் மாதாந்திர சுழலுக்கு சந்திரனின் சுழலுக்குமான ஒரு தொடர்பு மானுட ஆழ்பிரக்ஞையில் ஏற்பட்டதற்கான முதல் வெளிப்பாடுகள் இக்காலகட்டத்திலேயே தோன்றின. லஸ்கோ குகையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் சுண்ணாம்பு பாறையொன்றில் கொத்தப்பட்டு நிற்கிறாள் 43 செமீ உயரம் கொண்ட பெண் தெய்வம். அவள் கைகளில் சந்திர வடிவத்தில் ஒரு காளை கொம்பு. அக்கொம்பில் சந்திரகலைகளைக் காட்டும் பிரிவுகள். நிச்சயமாக இவ்வடிவம் மானுட பிரக்ஞை வந்தடைந்த மிகப்பெரிய அறிதலாகும். பின்னால் எழுந்த அனைத்து தாய் தெய்வ வடிவங்களுக்கும் இந்த கற்கால தாய் தெய்வத்தின் மண்ணையும் விண்ணையும் இணைக்கும் பிம்பம் மூலச்சட்டகமாகவே செயல்பட்டிருக்கிறது எனலாம். குகையையே ஆதி மனிதன் தாயின் கருவறையாகக் கண்டிருக்கலாம் என்று ஊகிக்கும் பெண்ணிய மானுடவியலாளர்களும் உண்டு.

நினைவில்
கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இங்கு: தாய் தெய்வம் எனும் கோட்பாடே விவசாய குடிகளின் பூமிப்பயன்பாட்டிலிருந்து எழுந்ததாகவே பல மானுடவியலாளர்கள் கருதிவந்தனர். கற்கால வேட்டை-சேகரிப்பு (hunter gatherer) காலகட்டத்தில் தாய் தெய்வ வழிபாடு எழுந்துவிட்டது என்பதும், இறை ஆவேசி மானுட பண்பாட்டை வாழ்வியலை நடத்திச்செல்லும் ஒரு ஆதார சக்தியாக பரிணமித்துவிட்டான் என்பதும் இன்று தொல்-மானுடவியல் நமக்கு தரும் காட்சி.

ஐரோப்பாவிலேயே மிக அதிகமான குகை ஆராய்ச்சிகள் நடந்திருப்பதாலும், பொதுவாகவே ஐரோப்பாவை மையப்படுத்தி உலகவரலாற்றை காண்பது மானுடவியல் புலங்களில் அதிகமாக உள்ளதாலும், தொல்-கற்கால வரலாற்றில் ஐரோப்பிய குகைகளே அதிக இடம் பிடித்துள்ளன. ஆனாலும் இன்று பிற கண்டங்களிலும் ஆராய்ச்சிகள் விரிவடைய விரிவடைய நாம் இந்த
ஐரோப்பிய மையப்படுத்தல் எனும் கதையாடலிலிருந்து விலகி மானுடம் குறித்த பார்வையை அகலப்படுத்த முடிகிறது. இன்றைக்கு வாழும் மதங்களின் சிக்கலான இறையியல் கோட்பாடுகள், கலையம்சங்கள் நிறைந்துயரும் ஆலயங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றால் நாம் காணும் நிறுவன மதங்களின் அடிப்படை ஆன்மிகப் பார்வைக்கு சிறிதும் குறையாத ஆன்ம-அனுபவங்களின் அடிப்படை குகை ஓவியங்களில் இருப்பதை நாம் அடுத்து காணலாம்.